Saturday 12 June 2010

'ஏழாவது ஊழி'
பொ.ஐங்கரநேசனின் கட்டுரைகளின் தொகுதி இதுவாகும்.
ஏற்கனவே 'வேர்முகங்கள்' எனும் நூலை வெளியிட்டுள்ளார்.இவ்விரு நூல்களையும் 'சாளரம் பதிப்பகம்'மூலமாகவே வெளியிடப்பட்டுள்ளது .சிறப்பாகவே வந்துள்ளதனை பாராட்டியேயாகவேண்டும்.
430 பக்கங்களில் 2009 இல் 'சுற்றுபுறச் சூழல் சார்ந்த தினக்குரல்,கூடம்,அரும்பு,பசுமைத்தாயகம்,சாளரம் இலக்கிய மலர்,கருஞ்சட்டைத் தமிழன்,தாமரை,அருவி,வைகறை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூலாக நம் கரம் கிட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஐங்கரனேசனின் எழுத்து நடையை 'வேர்முகங்களில்'கண்டிருந்தோம். கூடவே,
கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள் அனைத்தும் சிறப்பானது.எனவே அதில் வரும் எழுத்துக்கள் சிறப்பானவைகள் என ஊர்ஜீதப்படுத்தலாம்.ஆசிரியர் மனித நேயம் மிக்கவர் என்பதை அவரின் பார்வை கட்டுரைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டுரகளை உள்வாங்க முன் அவற்றின் தலைப்புக்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.பூகோள மயமாதல் அல்லது சூழல் மாசுபடுதல் எத்துணை தூரம் வளர்ந்த்து வரும் நாடுகளை அச்சுறுத்துகிறது என்பது புரிகிறது.
கொதிக்கும் பூகோளம்,அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்றஆர்லியன்சும்,ஓசோன் குடையில் ஓட்டை,பிலாஸ்டிக்கின் பிடியில் பூமி,அச்சுறுத்தும் ,அஸ்பெஸ்ரஸ்,கொலைக்களமாகும் அடுக்களைகள்,நீல நஞ்சு,காதினுள் பாயும் நஞ்சு,செல்லிடப்பேசிகள் வரமா? சாபமா?,தள்ளாடும் மினமாட்டா,சுவாசமே நஞ்சாக..,தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை,மென்பானங்களின் வன்முறைகள்,நீரின்றி அமையாது உயிர்,பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்,யாழ்ப்பாணம் பாலையாகுமா?நீர்ப் போர் மூளுமா?முற்றுகையில் மழைக்காடுகள்,கண்டல்களைக் காப்போம்,படையெடுக்கும் பார்த்தினீயம்,வாழை உயிர் வாழுமா? இயற்கை விரித்த வலை,சுதந்திரத்தின் சிறகுகள்,காணாமற் போகும் கடற்குதிரைகள்,கேட்குமா இனித் தவளைச் சத்தம்?,ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள்,புலிகள் அழியலாமா?,குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும்,தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்,பறிபோகும் பாரம்பரிய மருத்துவம்,காப்புரிமை என்னும் பொருளாதாரஆயுதம்,எதனோல் பெற்றோல்:மாற்றா-ஏமாற்றா?,மிதிவிசைப் பயணம்,ஊமையாகும் மொழிகளும் மணிக்கும் உயிர்ச் சூழலும்,ஏழாவது ஊழி,கோழிகளைக் கொல்ல இராணுவம்,அசைவமா?..சைவமா?,உலகப் பசிக்கு உருளைக் கிழங்கு,தாங்குமா இந்தப் பூமி?,தேசிய வாசம் வீசும் கார்த்திகைப்பூ,விடுதலைச் சூழலியல்..
தலைப்புக்களால் புரிய வைக்கின்ற சூட்சுமம் தெரிந்த கலைஞனாக ஆசிரியர்.
தங்களின் குப்பைகளை கொட்டுகின்ற கொடுமை இங்கு நடைபெறுகிற துயரம் நமக்குப் புரிகிற மொழியில் எழுதியதில் நமை வியப்பில் ஆழ்த்துகிறார்.
வாசகனின் மொழி தெரிந்தவனே எழுத்தை ஆழமுடியும்.
போர்ச் சூழல்,மக்கள் இடப்பெயர்வு,காடுகள் அழிப்பு,இராசயனக் கலவைகளின் அதீத பாவனைகளினால் வட பகுதி தண்ணீர்,சூழல்,விலங்குகளின்/மனிதர்களின் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி...இவைகளை ஆய்ந்துணர்ந்து கட்டுரைகளை தந்து எமை ஒரு அறிவியல் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் .
'மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக
பரிணமித்து விட்டதும்,வளங்களை வரம்பின்றிச் சூறையாடும்
அபத்தமும்தான் சுற்றுச் சூழலின் முக்கிய எதிரிகளாக
விளங்குகின்றன'..ஃபிடல் கஸ்ட்ரோ சொல்கிறார்.
கார்த்திகைப் பூவின் சிறப்பை அதிகமே சொலிச் செல்கிறார்.
சில நாடுகளில் பூக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளார்கள்.
'கார்த்திகைப்பூவின் நிறத்தில் இவள்
கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில்
தூயவள் மேனி சிலிர்க்கும்.'
புதுவையின் கவிதையூடாக பல செய்திகளை/ தமிழ்த் தேசிய பூ சார்ந்த விசயங்களை,ஈழத்தில் கார்த்திகைப் பூ மரம் பற்றி ஆய்வுடன் எழுதுவது எழுத்துடன் நம்மை நெருங்க செய்கிறது.
யாழ் நகரில் புகழ் பெற்ற கல்விநிறுவனமான 'யூனிவேர்சல் சயன்ஸ் அக்கடமி'யை சிறந்த முறையில் நடாத்திய பெருமை ஐங்கரநேசனையே சாரும்.
முதன் முதலாக யாழ் நகரில் ஆய்வுகூட பரிசோதனை நடத்திய பெருமையும் இவரையே சேரும்.சட்டநாதனின் நட்பும் ,புதுவையின் நெருக்கமும் இயல்பாகவே இவருக்கிருந்த தேடல் முயற்சியும் 'ஏழாவது ஊழி'நூலை படிக்க வாய்த்திருக்கிறது.
பூகோள மயமாக்கலின் திசை மாற்றம் எம் மக்களின் வசந்தம் கைக்குள் வரும் போது ஐங்கரநேசனின் மகளைப் போல் நமது பிள்ளைகளும் 'பொன்வண்டு' பிடிக்கும் கனவு நிறைவேறும்.
வாழ்த்துக்களுடன்...

-முல்லைஅமுதன்-

No comments:

Post a Comment